காணி பேர்ச்சஸ் பற்றிய விளக்கங்களும் தேவை
மலையக மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தில், மேலதிகமாக அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் குறிப்பிட்டதாவது:
பெருந்தோட்டங்களில் கட்டப்படும் வீட்டுத்திட்டங்களை பத்தாயிரமாக அதிகரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2017 இல் அறிவித்தார்.
நாம் ஆதரவு வழங்கிய ஆட்சி 2019 இல், முடிந்ததால் இத்திட்டத்தை தொடர முடியாது போனது.இருந்தாலும், தற்போது அதிகரிக்கப்பட்ட இவ்வீட்டுத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதை வரவேற்கிறேன்.
எமது ஆட்சியில் ஏழு பேர்ச்சஸ் காணிகள் என அறிவித்தோம்.2019இல், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் இருபது பேர்ச்சஸ் என அறிவித்தனர்.பின்னர் கடந்த பட்ஜட்டில் பத்து பேர்ச்சஸ் என அறிவிக்கப்பட்டது.
இதனால், இன்று ஆரம்பிக்கப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீட்டுக் காணிகளின் விஸ்தீரணம் பற்றிய ஒரு தெளிவின்மை மக்கள் மத்தியில் இருக்கிறது.
இன்று ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தில் கட்டப்படும் வீட்டு காணி விஸ்தீரணம், ஏழு பேர்ச்சசா, பத்து பேர்ச்சசா அல்லது இருபது பேர்ச்சசா என்ற விபரத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
காணி விஸ்தீரணம் அதிகரிக்கப்பட்டிருந்தால் நாம் பெருமகிழ்ச்சி அடைவோம்.
2017இல் , எமது ஆட்சியின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 10,000 இந்திய வீடமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அது,இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை இதயபூர்வமாக வாழ்த்தி வரவேற்கிறோம் என்றார்.