யெமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது எறிவதற்கு தயாராக வைத்திருந்த நான்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் நிலத்தைத் தாக்கும் குரூஸ் ஏவுகணை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக அந்தக் கட்டளையகம் குறிப்பிட்டது.
முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து ஹூத்தி இலக்குகள் மீது கடந்த சனிக்கிழமை கடும் தாக்குதல்களை நடத்தி இருந்தன.
இதில் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி ஜோர்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புட்சிக் காவல் படை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட போராட்டக் குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா கடந்த வெள்ளியன்று தாக்குதல்களை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த குழுக்களை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் அந்நாட்டு ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக ஹூத்திக்கள் சூளுரைத்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் சுயேஸ் கால்வாய் வருவாய் கிட்டத்தட்ட பாதியாக வீழ்ச்சி கண்டிருப்பதாக எகிப்து குறிப்பிட்டுள்ளது. ஹூத்திக்களின் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியான பயணப்பாதையை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.