பிரிட்டிஷ் மன்னர் 3ஆம் சார்ள்ஸ் (Charles iii) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் தொடர்புடைய பணிகளை ஒத்திவைத்துள்ளதாகவும் பக்கிங்ஹம் மாளிகை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் சார்ள்ஸ் மன்னருக்கு சிறுநீர் பையின் கீழுள்ள புரஸ்டேட் சுரப்பி (முன்னிற்கும் சுரப்பி) பெரிதாகிய பிரச்சினை தொடர்பில் சிகிச்சை பெற்றிருந்தார்.
75 வயதான மன்னர் சார்ள்ஸ் இது தொடர்பில் அவர் சத்திரசிகிச்சையொன்றையும் முகம் கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட மருத்துவ சோதனைகளில் அவருக்குப் புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புற்றுநோய் எவ்வகையானது என்பது தொடர்பில் மாளிகை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றுமுதல் (05) அவருக்கு புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி, பொதுமக்களை சந்திக்கும் கடமைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
அவர் தொடர்ந்தும் அரச பணிகளில் ஈடுபடுவார் எனவும், ஆவணங்கள் தொடர்பான பணிகளில் மாத்திரம் அவர் கவனம் செலுத்துவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் தனது சிகிச்சை தொடர்பில் சாதகமாக கருதுவதாகவும், கூடிய விரைவில் அனைத்துப் பொறுப்புகளிலும் மீண்டும் ஈடுபட ஆவலுடன் இருப்பதாகவும் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது நோய் பற்றீ பகிரங்கமாக அறிவிக்க சார்ள்ஸ் மன்னர் விரும்பியதாகவும், ஊகங்களைத் தடுக்கவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் பொதுவான புரிதலுக்கு உதவும் என்றும் நம்புவதாகவும் மாளிகை தெரிவித்துள்ளது.
இச்செய்தி வெளியான சிறிது நேரத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ரிஷி சுனக், சார்ள்ஸ் மன்னர் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தாம் வருந்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.