நுரைச்சோலை, நாவக்காடு, கொலனி பிரதேசத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபடும் பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில், ஆயுத முனையில் 01 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் (02) அதிகாலை இரண்டு மணியளவில் கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த இந்த ஆயுதக் கும்பல், முதலில் அங்கிருந்த தொழிலதிபரையும் , அவரது மனைவி உட்பட குடும்பத்தினரையும் பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.
இவ்வாறு, வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவினர், அவர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன், வீட்டிலிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை பலாத்காரமாக திறந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த சுமார் 70 பவுண் தங்க நகைகள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணம் என்ப வற்றை ஆயுதக்குழுவினர் கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை மற்றும் கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்