நாட்டில் கடந்த 15 வருடகால வரவு செலவுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை சில முன்னேற்றகரமான விடயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதால், அதனை வரவேற்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வட மாகாணத்துக்கான பூநகரித் திட்டம், பாலியாறு குடிநீர்திட்டம். மீள்குடியேற்றம், வீடமைப்புத் திட்டம் ,காணாமற்போனோருக்கான ஒதுக்கீடுகள் என சில சிறந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பதிலேயே சந்தேகமுள்ளது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக்கட்சி மாநாட்டை நடத்தி 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் ,
காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கினார்.
ஆனால், அவை எதுவுமே நடைபெறவில்லை. யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணங்களாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் காணப்படுகின்றன.
எனினும், யுத்தம் முடிவடடைந்து வருடங்கள் பல கடந்தும் இன்று வரை விசேட தேவையுடைய மாகாணங்களாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் அறிவிக்கப்படவில்லை. வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பொருளாதாரங்களும் பாதுகாக்கப்படவில்லை.
மைத்திரி -ரணில் ஆட்சிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. ஆனால் அந்த நல்லாட்சி வரவு செலவுத் திட்டத்திலும் வடக்கு,கிழக்கு முற்றாக புறக்கணிக்கப்பட்டது.
சர்வதேச உதவி வழங்குவோர் மாநாட்டை நடத்தி அதன் மூலம் வடக்கு,கிழக்கு அபிவிருத்தி செய்யப்படுமென உறுதி வழங்கப்பட்டது.
ஆனால் அதற்குள் 52 நாள் ஆட்சியில் மாற்றம் வந்ததால் எதுவும் நடக்கவில்லை.
யுத்தத்தினால் 30 வருடங்களாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு,கிழக்கு மக்கள் கொரோனாவாலும் அதன் பின்னர் பொருளாதர நெருக்கடியினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்