எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் எட்டுப்பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது இவர்களது நான்கு மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு, மண்டபம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்த 08 மீனவர்களும் இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வந்ததாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் மேற்கொண்ட நடவடிக்கையில், இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் மஞ்சள் கடத்திய மண்டபத்தைச் சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கடத்திய தங்கத்தை, மண்டபத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு,பதிலாக அவர்களிடம் மஞ்சள் மற்றும் கடல் அட்டைகளை வாங்குவதற்கு நடுக்கடலில் காத்திருந்த போது பிடிப்பட்டனரா? என்ற கோணத்தில் இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.