க.பொ.த.உயர்தரப் பரீட்சையை ஜனவரி 04ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால், டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இம்முறை பாடசாலை தவணை விடுமுறையை டிசம்பர் 22 முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இப்பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கு விண்ணப்பிப்பதானால் அவர்களுக்கு 03 தினங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமாளவில் வெளியிடப்படும்.
அதேவேளை, பாடசாலை விடுமுறை இம்முறை டிசம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன் பரீட்சை முடிவடைந்த பின்னர் ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்