யாழ். விசேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்
டெங்குநோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்கவுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான Dr. த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டெங்குநோய் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இருப்பதால், அதனைச் சூழவுள்ள இடங்களில் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“டெங்கு நுளம்புகள் வீரியம்மிக்க நுளம்புகளாக உள்ளதாக பூச்சியியல் ஆய்வு சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பரவியுள்ள டெங்குத் தொற்று மூன்றாவது வகை நுளம்பின் மூலமே பரவுவதாகவும் இம்முறையே டெங்குநோய் யாழ்ப்பாணத்தில் பரவியுள்ளது.
ஆயினும், மக்கள் மத்தியில் இதற்கான தற்காப்பு வளங்கள் இல்லாதுள்ளது.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் 150 பேர் நாளாந்தம் டெங்குநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். இம்மாதம் 1,284 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்” என்றார்.