ஈரானிய ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம்.அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், மறைந்த ஜனாதிபதி கலாநிதி செய்யது இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் Dr. Hossein Amirabdollahian மற்றும் சிரேஷ்ட ஈரானிய அதிகாரிகளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கடந்த 22ஆம் திகதி தெஹ்ரானுக்கு சென்றிருந்தனர். ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு வெளியுறவு அமைச்சர் இரங்கல் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை மக்கள் சார்பாக இடைக்கால ஜனாதிபதி கலாநிதி Mohammad Mokhber மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அலி பகேரி கனி Dr. Ali Bagheri Kani ஆகியோரிடம் தமது அனுதாபங்களை தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த விஜயத்தின் போது வெளிநாட்டமைச்சர், ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதியுயர் தலைவர் கலாநிதி அயதுல்லா செயிட் அலி கமேனி (Ayatollah Dr. Seyyed Ali Khamenei) மற்றும் இடைக்கால ஜனாதிபதி கலாநிதி மொஹமட் மொக்பரிடம் (Dr. Mohammad Mokhber) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரங்கல் செய்தியை கையளித்தார். உயர்மட்ட குழுவின் வருகையை பாராட்டிய இடைக்கால ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரங்கல் செய்திக்கு நன்றி தெரிவித்தார்.
மறைந்த ஜனாதிபதி கலாநிதி ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் கலாநிதி அமிரப்துல்லாஹியன் ஆகியோருக்கு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய மாநாட்டு மண்டபத்தில் வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளின் பெரும் கூட்டத்துக்கு மத்தியில் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இறுதி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. ஈரானிய ஜனாதிபதியின் மறைவையொட்டி இலங்கையின் அரசாங்கம் கடந்த 21 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.