அரபு உலகின் ஓர் துணிச்சல் மிக்க, சிறந்த கல்வியறிவைக் கொண்ட தலைவர் ஈரான் ஜனாதிபதியாகவிருந்த இப்ராஹீம் ரைசி ஆவார். அவர் பலஸ்தீனர்களின் படுகொலைகளை நேரடியாக கண்டித்து வந்தவர். தனது நாட்டினை ஓர் ஒழுக்க இஸ்லாமிய நாடாக உருவாக்க முற்பட்டவர். விஞ்ஞானம் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் திகழும் நாடாக ஈரான் விளங்கி வருகின்றது.
காலம் சென்ற ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி நவம்பர், 1960 ஆம் ஆண்டு இஸ்லாமிய மார்க்கப் பற்றுள்ள ஓர் குடும்பத்தில் பிறந்தார். 1978 இல் ஆயத்துல்லா கொமெய்னி புரட்சியில் இணைந்து தீவிரமாக ஈடுபட்டார்.
தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் சட்ட வல்லுநராக தன்னை நெறிப்படுத்தினார். 1980 களில் மாவட்ட சட்டத்தரணியாக செயற்பட்டார். 1985 இல் பிரதி சட்ட வல்லுநராக தெஹ்ரானில் கடமையாற்றினார். 1989 – 1994 வரை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆக செயல்பட்டு 1994-2004 வரை தெஹ்ரானின் பரிசோதக நாயகமாக கடமையாற்றினார்.
2004-2014 பிரதி நீதிபதி, 2004-2005 சட்ட ஆணையாளர் நாயகம் ஆகிய கடமைகளை ஆற்றி உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசராகவும் கடமையாற்றியுள்ளார்.
1975 இல் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கல்வியில் சட்டம் தொழில்நுட்பம் சம்பந்தமான இணை பேராசிரியராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
2016 இல் அரசியல் கட்சியான இஸ்லாமிய புரட்சி படையினர் கட்சியின் தலைவராக செயல்பட்டு தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 2021 ஜூன் இல் 63வீத வாக்குகளை (18 மில்லியன்) பெற்று ஈரான் குடியரசின் 13 ஆவது ஜனாதிபதியாக இப்ராஹீம் ரைசி தெரிவு செய்யப்பட்டார்
இவர் மிகவும் இஸ்லாமிய மார்க்க பக்தி கொண்டவர். அவரது மனைவி ஓர் விஞ்ஞானியாவார். இரண்டு மகள்மார் உள்ளனர். இவர்களும் பல்கலைக்கழக கல்வி கற்று தேர்ந்தவர்களாக உள்ளனர்.
அண்மையில் உமா ஓயா நீர்த்தேக்க திட்டம் திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதேவேளை கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு வருகை தந்து தொழுகை நடத்தினார்.
ஈரான் ஜனாதிபதி அங்கு உரையாற்றும் போது, உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் ஒர் நாடாக ஈரான் வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.
இலங்கையின் உமா ஓயா திட்டம் போன்று மேலும் 21 நாடுகளில் ஈரான் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் குடிநீர்த் திட்டம், நீர் மின்சாரத் திட்டம், நீர்த்தேக்கங்களை விவசாய உற்பத்திக்கு திசைதிருப்புதல் போன்ற திட்டங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
அத்துடன் அவர் தனது தலைவர் அயத்துல்லா கொமெய்னியின் ஆதங்கமாக இருந்த பலஸ்தீன் புனித பூமியை மீட்டெடுத்து பலஸ்தீன் ஓர் சுதந்திர நாடாக திகழ வேண்டும் என குறிப்பிட்டார்.
அஷ்ரப் ஏ சமத்