இருபக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மொங்கோலியாவும் இந்தியாவும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளன. இது தொடர்பிலான கூட்டு செயற்குழுக்கூட்டம் மொங்கோலியாவின் உலன்பாடரில் நடைபெற்றுள்ளன.
இந்திய, மொங்கோலியப் பாதுகாப்பு அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகளும் அடையாளம் காணப்பட்டதோடு தற்போது இடம்பெற்றுவரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, தங்கள் திருப்தியை இரு தரப்பினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) அமிதாப் பிரசாத், மொங்கோலிய பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் கன்குயாக் தவாக்டோர் ஆகியோரின் இணைத்தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரசாத், இந்தியப் பாதுகாப்புத் துறையின் திறன்களது சாத்தியக்கூறுகளை எடுத்துக்கூறியதோடு மங்கோலிய பாதுகாப்பு படையினருடன் பயனுள்ள கூட்டாண்மையை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அச்சமயம் மங்கோலிய தரப்பினர் இந்திய கைத்தொழில்துறையின் திறன்கள் மீது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.
இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் அமிதாப் பிரசாத்தும், மங்கோலியாவுக்கான இந்திய தூதர் அதுல் மல்ஹாரி கோட்சர்வேயும் மொங்கோலியாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பி. பயர்மக்னை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.