சுயாட்சி புரிந்து வரும் தாய்வானை சூழவுள்ள வான் மற்றும் நீர் பகுதிகளில் சீனா இரண்டு நாள் போர் ஒத்திகை ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளது.
தாய்வான் நீரிணை, தாய்வானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் அதேபோன்று கின்மன், மட்சு, வுகியு மற்றும் டொங்கியின் தீவுகளை சூழ இந்தப் போர் ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சீன அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா குறிப்பிட்டுள்ளது.
பிரிவினைவாத செயல்களுக்கு இந்தப் போர் ஒத்திகை வலுவான தண்டனையாக இருக்கும் என்று சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்வானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதியாக அண்மையில் பதவியேற்ற வில்லியம் லாய் தனது முதல் உரையில், தாய்வான் இறைமை மற்றும் சுதந்திர நாடு என்றும் அதன் ஜனநாயகம் மற்றும் இறைமையில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.