தம்புள்ள அணி உரிமையாளர் கைது செய்யப்பட்டு அந்த அணியின் உரிமையாளர் நீக்கப்பட்ட நிலையில், லங்கா பிரீமியர் லீக் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ள அணியின் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிகழ்வு எப்படி இருந்தபோது, எல்.பி.எல். தொடரின் 05 ஆவது பருவம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று போட்டி நிகழ்ச்சியின் உரிமை பங்குதாரரான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குழுமம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், கிரிக்கெட்டில் சிறந்த போட்டிகளின் காட்சிப்பொருளாக இந்தப் போட்டி தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பது எல்.பி.எல். 5ஆவது பருவம் ஐந்து அணிகளைக் கொண்டதாக அதன் முழு அட்டவணையுடன் நடத்தப்படும் என்று உறுதி செய்த குழுமம், உரிமையாளர் நீக்கப்பட்ட தம்புள்ள அணி புதிய உரிமையாளரின் கீழ் போட்டியில் இடம்பெறும் என்று குறிப்பிட்டது. ‘தொடரில் அணியின் தடையற்ற மாற்றம் மற்றும் தடங்கல் இல்லாத பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் புதிய உரிமையாளரை உறுதி செய்யும் இறுதிக் கட்டத்தை நாம் எட்டியுள்ளோம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 01 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதோடு கண்டியில் ஆரம்பமாகும் தொடர் பின்னர் தம்புள்ளை மற்றும் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாக லங்கா பிரீமியர் லீக் கடந்த புதனன்று (22) அறிவித்தது. தம்புள்ள தண்டர்ஸ் உரிமையாளரான பிரிட்டன் கடவுச்சீட்டை உடைய பங்களாதேஷ் நாட்டவரான இம்பீரியல் ஸ்போட்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமீம் ரஹ்மான், ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.