மோட்டார் சைக்கிள்களை திருடி, பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்த இளைஞர் இருவரை, மினுவாங்கொடை பொலிஸார் (14) கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் 31 வயதான உடுகம்பொல, கெஹல்பத்தர ஜூட் எனப்படும் சுபசிங்க ஆராச்சிகே தரிந்து ஜூட் லக்மால் பெரேரா மற்றைய நபர் உடுகம்பொல, பதஹவத்தே சுத்தா அல்லது விக்கிரமஹெட்டி கோண்திலாகே ஹசித பிரசாத் குமார் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மினுவாங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிவிட்டு தப்பிச் சென்று கொண்டிருந்த போது, இங்கு இரண்டாவது சந்தேக நபரான பதஹவத்த சுத்தா என்ற சந்தேக நபர் மினுவாங்கொடை பொலிஸாரால் (14) கைது செய்யப்பட்டார். இவரை விசாரித்ததன் மூலம் மேலதிக தகவல்கள் அறியப்பட்டுள்ளன. இவர்கள் YX-6690 என்ற இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் சென்று மினுவாங்கொட, யக்கல, வீரகுல, வெலிவேரிய, கம்பஹா, ஜா-எல, நிட்டம்புவ, கட்டான, கட்டுநாயக்க ஆகிய பிரதேச வீதிகளில் சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். இவ்வாறு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பாதாள உலக குற்ற நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.