இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, திருகோணமலையில் நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருந்ததுடன், தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக கூட்டத்தில் கலந்துரையாடவிருந்த நிலையிலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால் கட்சி உறுப்பினர்கள் அதற்கு செல்லவுள்ளதாகவும், இதனால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இதனால் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.