ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் உள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது 10 ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இஸ்ரேலின் இந்த சுற்றிவளைப்பு கடந்த வியாழக்கிழமை (18) தொடக்கம் இடம்பெற்று வருகிறது.
இதன்போது வீதிகளில் உடல்கள் இருப்பதும், வானில் சுற்றித் திரியும் ஆளில்லா விமானங்கள் வீடுகளை தாக்குவதையும், பலஸ்தீன முகம்களுக்கு ஊடாக கவச வாகனங்கள் செல்வதையும் கண்டதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘இதுவரை எமது பணியாளர்கள் நூர் ஷம்ஸ் முகாமில் இருந்து 14 சடலங்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்’ என்று பலஸ்தீன செம்பிறை சங்கம் கூறியது.
பலஸ்தீன போராளிகளை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை நடத்தியபோதும் பெரும்பாலான பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேறிகளினால் இதுவரை சுமார் 480 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.