சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் துணை அமைச்சர் சன் ஹையன், இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இவர் விஜயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரை சந்தித்து இவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாக உள்ள நிலையில், இவரது விஜயம் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அண்மைய சீன விஜயத்தின்போது இரு முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டன.சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார திட்டத்திற்கு கடன் மறுசீரமைப்பு ஊடாக ஒத்துழைக்கும் உத்தரவாதத்தை அறிவித்தல் மற்றும் சீனா, இலங்கைக்கு வழங்கியிருந்த கடன் மீள் செலுத்துகைக்கான நிவாரண காலத்தை நீடித்தல் பற்றியே பேசப்பட்டிருந்தன. இத்தவணைக் காலம் ஏப்ரல் மாதம் 18 உடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், சர்வதேச கடன் மறுசீரமைப்புகளை எதிர்வரும் ஜூனுக்குள் நிறைவுபடுத்த வேண்டிய நிலையில், சீனா இதுவரையில் இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உறுதியான உத்தரவாதத்தை வழங்காதுள்ள நிலையிலே யே,சீனாவின் துணை அமைச்சர் இலங்கை வருகிறார்.