இந்தியாவும் இலங்கையும் வரலாறு, கலாசாரம், வணிகம், வர்த்தகம் ஆகியவற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உறவுகளைப் பகிர்ந்து வருகின்றன. அண்மைய ஆண்டுகளில், இரு அண்டை நாடுகளும் பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்தியுள்ளன. இது இந்தியப் பொருளாதாரத்தின் 3.7 ட்ரில்லியன் டொலரை இலங்கையின் வணிகங்களை அணுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. இதன்போது எரிபொருள் சமையல் எரிவாயு உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இந்தியாவினால் 4 பில்லியன் டொலர் வசதி வழங்கப்பட்டது. இந்தியாவின் இந்த செயலானது, மேலும் ஒரு படி முன்னேறி இலங்கையில் முதலீடு செய்வதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தனியார் துறைகளும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துள்ளன. இலங்கையில், பொருளாதார நெருக்கடியானது, உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதன் செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் எச்சரிக்கையை எழுப்பியது. அதற்கமைய, அயல் நாடு எனும் வகையிலும், 1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நாடு எனும் வகையிலும் இந்நிறுவனங்களுக்கு இந்தியாவை அதற்கான இயற்கையான மாற்று தெரிவாக மாற்றியது.
நாடுகளுக்கிடையிலான நெருக்கமான ஒத்துழைப்புக்கு மற்றொரு சிறந்த உதாரணம் ‘சுவ செரிய’ அம்பியூலன்ஸ் சேவை அல்லது 1990 அம்பியூலன்ஸ் சேவையாகும். இந்திய அரசாங்கத்தின் ஆரம்ப மானியமான 7.56 மில்லியன் டொலர் நிதி மூலம் 2016 இல் இது செயற்படுத்தப்பட்டது. அது பின்னர் மேலும் 15.09 மில்லியன் டொலாராக அதிகரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்ததை அடுத்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இலங்கை பொருளாதார ரீதியாக ஆதாயமடைவதற்கான மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்றாக, முக்கிய துறைகளில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDIs) கவர்வது அமைகின்றது. அதே வேளையில் ஒருங்கிணைந்த மற்றும் இயற்கையான பலத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள வணிகங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவும் முடியும். இந்தியா இலங்கைக்கு அருகாமையில் இருப்பது, நாட்டின் வட பகுதி பொருளாதாரத்தின் பல அம்சங்களில் முதலீட்டை ஈர்ப்பதற்கான ஒப்பற்ற வாய்ப்பை வழங்குகிறது. உதாரணமாக, ஹொங்கொங் மற்றும் சீனாவை குறிப்பிடலாம். ஹொங்கொங் அதன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீனாவின் பொருளாதாரத்துடன் இணைந்து செயலாற்றியமை யாவரும் அறிந்ததே. ஹொங்கொங்கைப் போன்று இலங்கையால் இதுவரை அவ்வாறான பலனைப் பெற முடியவில்லை, எனினும் இதுவே அதற்கான சரியான தருணமாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய முதலீடுகளே காலத்தின் தேவையாகும். சமீபத்தில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) மற்றும் கொழும்பில் ITC Ratnadipa ஹோட்டலை ஆரம்பித்தல் போன்ற முக்கிய முதலீடுகளை இந்திய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியாவின் அதானி மற்றும் SEZ, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான John Keells Holdings ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக, கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, இலங்கையில் ஒரே திட்டத்தில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டை CWIT திட்டம் ஏற்படுத்தியுள்ளது.
பாக்கு நீரிணையில் அமைந்துள்ள நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் 2,230 kW கொள்ளளவு கொண்ட ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த, இந்திய அரசின் 11 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் கலப்பு மீள்புதுப்பிக்கத்தக்க மின்சக்தி தொகுதிகளை நிர்மாணிப்பதில் இந்தியா முதலீடு செய்கிறது. தற்போது தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்படாத மூன்று தீவுகளின் மின்சக்தித் தேவைகளை இந்த திட்டம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நாட்டின் மின்சக்தி கட்டமைப்பு பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய மற்றும் நிலையான ஆதாரமாக இந்தியா விளங்குகின்றது. வலுவான விமானத் தொடர்புக்கு அப்பால், சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான நேரடி விமான சேவைகள் நாட்டின் வட பகுதியில் உள்ள மக்களுக்கான விமான பயண தெரிவுகளை மேம்படுத்தியுள்ளன. அத்துடன், இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான படகு சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய விமான சேவையானது, முதலீட்டாளர்களை அவசரமாக தேடி வரும் இவ்வேளையில், பல இந்திய பெருநிறுவனங்கள் அதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளன.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் வர்த்தக செயற்பாடுகளை அதிகரிக்கக்கூடிய மற்றுமொரு தூணாகும். இந்தியாவுடனான இருதரப்பு சரக்கு வர்த்தகத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இலங்கைக்கு ஆதரவான வகையில் நிபந்தனைகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவாகும். தடைப்பட்ட இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (ETCA) ஆனது, சரியான கொள்கைகளுடன் கொண்டு வருவதன் மூலம் மீண்டும் இலங்கைக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அந்த வகையில், அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தை சாத்தியமான இந்திய முதலீட்டாளர்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். ஆயினும் போலியான பல சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கட்டணங்கள் மற்றும் சூழல் தொடர்பான பொய்களின் அடிப்படையில் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர். நாட்டின் ஏனைய மின் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதானி குழுமம் மிகக் குறைந்த கட்டணத்தை முன்மொழிந்துள்ளமையை ஊடக அறிக்கைகளில் நாம் காண்கிறோம். அத்துடன் இந்த திட்டமானது, ஒரு உணர்திறன் மிக்க வலயத்தில் இல்லை என்பதை சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கை தெளிவுபடுத்துகிறது. அந்த வகையில், நாட்டில் 750 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அதனுடன் இணைந்த மேலும் பல எதிர்கால முதலீடுகளும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இலங்கையானது, தனது தேசிய நலன் தொடர்பில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதுடன், பல்வேறு குறுகிய நலன் மிக்க குழுக்களின் பிடியில் இத்தகைய முக்கிய திட்டங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்திய முதலீட்டாளர்களுக்கு உலகெங்கிலும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதை இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன், ஆரம்ப ஆர்வங்களை விரைவாக முதலீடுகளாக மாற்றுவதை உறுதி செய்து, முதலீட்டாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் தாமதங்களைத் தவிர்க்க வேண்டும்.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றை இந்தியா கொண்டுள்ளது. அத்துடன் இலங்கை தனது அண்டை நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து பொருளாதார ஆதாயங்களைப் பயன்படுத்துவதற்கான நேரம் இதுவாகும். இலங்கைக்கு மிக அருகிலுள்ள இந்தியாவிலுள்ள மாநிலமான தமிழ் நாட்டின் பொருளாதாரம், 2034 ஆம் ஆண்டளவில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கை முழுவதிலும் உள்ள வணிகங்களுக்கு இலாபகரமான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியா – இலங்கை உறவுகளில் ஒரு உற்சாகமான தருணம் இதுவாகும் என்பதோடு, இலங்கை வணிக நிறுவனங்கள் விரைவாக வளர்வதற்கான ஒரு சரியான படியை இது வழங்குகிறது.
(கிஷோர் ரெட்டி, இலங்கை இந்திய சங்கத்தின் தலைவரும் இலங்கையில் உள்ள இந்திய CEO மன்றத்தின் துணைத் தலைவரும் ஆவார். இலங்கையில் இந்திய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஊக்குவித்தல், இந்திய சந்தையை நிறுவுவதற்கும் அணுகுவதற்கும் இலங்கை வணிகங்களுக்கு உதவும் Shine Lanka திட்டத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். அத்துடன், BOI இன் ஆலோசகராகவும் கிஷோர் விளங்குகின்றார் என்பதுடன், இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தும் SLASSCOM உடன் அவர் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்.)