நல்லதண்ணியில் சம்பவம்
நல்லதண்ணி பிரதேசத்தில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதான உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் நேற்றுமுன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நல்லதண்ணி வாழமலை தோட்டப் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் பக்த அடியார்களுக்கு வழங்கப்பட்ட அன்னதான உணவு ஒவ்வாமை காரணமாகவே 60 பேரும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 32 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 28பேரும் சிகிச்சை பெற்று நேற்று காலை வீடு திரும்பியுள்ளதாகவும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார். 60 பேருக்கும் வாழமலை தோட்ட ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதான உணவினை உட்கொண்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஹற்றன் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த 60 பேரில் அதிகமாக பெண்களும் சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஹற்றன் விசேட , பொகவந்தலாவ நிருபர்கள்