ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைவடைந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுமையான பொறுப்புக் கூற வேண்டுமென,
அக்கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகிப்பதை தடை செய்து இடைக்கால தடை உத்தரவை நேற்று நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து, கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 140 எம்.பி.க்கள் இருந்ததாகவும் அதனை மூவராக குறைத்து, கட்சியின் முக்கிய பதவிகளில் பொருத்தம் இல்லாதவர்களை முன்னாள் ஜனாதிபதி நியமித்ததாகவும், அவர் தெரிவித்தார்.
இத்தகைய நிலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாதென்பதால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டநாயக்கவுடன் நீதிமன்றத்துக்கு சென்று கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அமைச்சர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி புதிய பயணத்தை தொடர கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை விட்டு விலகிச் சென்று பல இடங்களிலும் உள்ளோர் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும், அமைச்சர் தெரிவித்தார். கட்சியை பலப்படுத்துவதன்றி அதை வேறிடத்தோடு இணைப்பது அல்லது அழிப்பது தமது நோக்கம் அல்லவெனத் தெரிவித்த அவர், அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கால வேலைத்திட்டத்தை பலமானதாக முன்னெடுக்க அர்ப்பணிக்க வேண்டுமென்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்