நாட்டில் நிதி ஒழுக்கத்தை உருவாக்குவதற்காக கடன் உண்டியல்களுக்கு ஒப்பந்தம் செய்ய முடியாதென சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஏதாவது ஒப்பந்தம் தொடர்பில் அரச நிறுவனம் ஒன்றுக்கு உண்டியல் கிடைத்ததும் ஒரு மாதத்திற்குள் அதனை செலுத்த வேண்டும் என அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளதாகவும் அந்த உண்டியல்களை செலுத்துவதற்கு மூன்று மாதத்திற்கு மேல் காலதாமதம் செய்ய முடியாது என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
2023 ஆம் ஆண்டு 3 ட்ரில்லியன் வருமானம் கிடைத்ததுடன் மீண்டெழும் செலவினம் மாத்திரம் 4 ட்ரில்லியன் ரூபாவாக இருந்தது. அந்த வகையில் மீண்டெழும் செலவினத்தை சுமப்பது கஷ்டமானதாகும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை.
வரலாற்றில் முதல் தடவையாக 2022 ஆம் ஆண்டில் பிணைமுறி விநியோகிக்கப்பட்டுள்ளது. திறைசேரியானது எப்படியாவது நிதியைத் தேடி ஒப்பந்ததாரர்களுக்கு 361 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. மேலும் ஐந்து பில்லியன் ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. அனைத்து நிலுவையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாரியளவு நிதியை வழங்கும்போது அனைத்து ஒப்பந்ததாரர்களையும் நான் அமைச்சுக்கு அழைத்து உரிய நடவடிக்கை எடுத்தேன். அனைவரதும் வங்கிக் கணக்கை பெற்றுக் கொண்டு வங்கிக்கு பணம் செலுத்தப்பட்டது. அந்த வகையில் இந்த வருடத்திற்கு நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பழைய நிலுவையை வழங்காமல் வீதிகளை நிர்மாணித்தால் கிலோ மீட்டருக்கு 18,000 அல்லது 20,000 ரூபா செலவில் நிர்மாணிக்க முடிந்திருக்கும். அந்த வகையில் ஒப்பந்தக்காரர்கள் பெரும் நெருக்கடிக்குள் உள்ளார்கள். அவர்கள் வங்கிகளுக்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது. இயந்திர உபகரணங்களை திருத்த வேண்டியுள்ளது. அந்த நிலையிலிருந்து அவர்களை விடுவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்