தமது அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின நிகழ்வு, மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர், பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்ப முன்னர், தமது அடிப்படை தேவைகளை தயக்கமின்றி தெரிவிப்பதற்கும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென கூறியுள்ளார்.
அத்துடன் அரசியலிலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.