Saturday, May 18, 2024
Home » நாடு கடத்தப்பட்ட திபெத் பெண்கள் மெழுகுவர்த்திப் போராட்டம்

நாடு கடத்தப்பட்ட திபெத் பெண்கள் மெழுகுவர்த்திப் போராட்டம்

- 65ஆவது தேசிய பெண்கள் எழுச்சி ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்வு

by Rizwan Segu Mohideen
March 21, 2024 3:28 pm 0 comment

தேசிய எழுச்சி தினத்தின் 65ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், திபெத்தில் சீன அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராகவும், வட இந்திய மலை நகரமான சிம்லாவில் திபெத்திய பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

பௌத்த மாணவர்கள், துறவிகள் உட்பட திபெத்திய பெண்கள், வட இந்திய மலை நகரமான சிம்லாவில் ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், திபெத்துக்குள் 1959 பெண்கள் எழுச்சியின் போது இறந்த பெண்களை நினைவுகூரவும் இவ்வாறு கூடினர்.

நாடுகடத்தப்பட்ட திபெத்திய பெண்கள் இதில் பங்கேற்றதோடு தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவுவழங்குமாறு அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

போராட்டத்தின் ஏற்பாட்டாளரும் திபெத்திய சுதந்திர ஆர்வலருமான தாவா சியோடன் கூறுகையில், இந்த போராட்டத்தின் மூலம், சீனாவின் அட்டூழியங்களுக்கு மத்தியில் திபெத்தின் நிலைமையை உலகளவில் முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
“இன்று 65ஆவது பெண்கள் தேசிய எழுச்சி தினத்தை கொண்டாட நாங்கள் கூடியுள்ளோம். 1959 ஆம் ஆண்டு இந்த நாளில், 15,000 திபெத்திய பெண்கள் பொட்டாலா அரண்மனைக்கு அருகில் சீன சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். எங்களுக்காக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் கூடினோம். இந்த அமைதி அணிவகுப்பின் மூலம், திபெத்தின் நிலைமையை உலகிற்கு எடுத்துரைக்க முயற்சிக்கிறோம்,” என்று சியோடன் கூறினார்.

“திபெத்தில் இணையமோ செய்திகளை பரிமாறும் வசதியோ இல்லை. மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கூடிய நீர்மின் அணையொன்றை திபெத்தில் கட்ட சீனா திட்டமிடுகிறது. இது சீனாவுக்கு மட்டுமே பயனளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

நாடுகடத்தப்பட்ட திபெத்திய சமூகத்தின் ஊடகப் பேச்சாளர் செரிங் டோர்ஜி, திபெத்தில் மனித உரிமை மீறல்களை எடுத்துக்காட்டி, இந்திய-சீனா எல்லையில் கட்டப்படும் அணை உள்ளூர் கலாச்சாரத்திற்கும் பிராந்தியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை அளிக்கிறது என்று கூறினார்.

“திபெத்திய பெண்கள் தேசிய எழுச்சியின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள திபெத்திய சமூகங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. திபெத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. கல்வி உரிமைகள் பறிக்கப்படுகின்றன, சுற்றுச்சூழல் அழிக்கப்படுகின்றது.இந்திய – சீன எல்லையில் உள்ள மலைகளில் பெரிய அணைகள் கட்டப்படுகின்றன,” என்றும் அவர் சுட்டிக்கர்டினார்.

“இந்த அணைகள் இந்தியாவிற்கும் முழு ஆசியாவிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும். இப்பகுதியில் உள்ள முக்கியமான மதஸ்தலங்களை அழிக்கும் வகையில் அணை கட்டப்படுகிறது. மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களும் செய்யப்படுகிறார்கள். இன்று இந்த அமைதி ஊர்வலத்தின் மூலம் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று டோர்ஜி மேலும் தெரிவித்தார்.

1959 மார்ச் 12 ஆம் திகதி தேசிய எழுச்சிக்காக லாசாவில் திபெத்தியப் பெண்கள் மக்கள் குடியரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சீனாவின் எதிர்ப்பில் ஆயிரக்கணக்கான திபெத்திய பெண்கள் கொல்லப்பட்டனர்.ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா உட்பட 80,000 திபெத்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்போதிருந்து, ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

6 தசாப்தங்களுக்கு முன்னர் திபெத்துக்குள் கொல்லப்பட்ட திபெத்தியப் பெண்களை நினைவுகூர்ந்து உலகெங்கிலும் நாடுகடத்தப்பட்ட ஏராளமான திபெத்தியப் பெண்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். (ANI)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT