வீண் விரயம் வேண்டாமென அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக நீருக்கான கேள்வி அதிகரித்து, நீர் பாவனை 10 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அத்தியவசியமற்ற நடவடிக்கைகளுக்காக நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் அதிகார சபை பொதுமக்களை கேட்டுள்ளது.
மேற்படி சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி அதுதொடர்பில் நேற்று தெரிவிக்கையில், வரட்சியால், நீர் பாவனை அதிகரிப்பதால், அதிக வெப்பமான பிரதேசங்களில் பகல் வேளைகளில் நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர் குறைவடைகின்றமை மற்றும் நீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் முறைப்பாடுகள் தற்போது 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தற்போது உச்ச அளவில் நீர் பகிர்ந்தளிக்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்