இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சட்டொக்ராமில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் இன்றைய தினம் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். கடந்த இரண்டு போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற நிலையில் இன்றைய போட்டி பகல் ஆட்டமாக இலங்கை நேரப்படி காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதில் இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதைக்கு உள்ளான நிலையில் இன்றைய போட்டியில் அவர் ஆடாதது பின்னடைவாக உள்ளது. அவரது இடத்திற்கு சகலதுறை மிதவேகப்பந்து வீச்சாளர் சாமிக்க கருணாரத்ன அல்லது இரண்டாவது போட்டியில் ஆடாத சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மறுபுறம் பங்களாதேஷ் அணியிலும் அதிரடி மாற்றமாக அண்மைக் காலமாக சோபிக்கத் தவறி வந்த ஆரம்ப வீரர் லிட்டோன் தாஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜகர் அலி அழைக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்சீன் ஹசன் ஷகீபும் காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டி நடைபெறும் சஹுர் அஹமது சௌத்ரி அரங்கு துடுப்பாட்டத்திற்கு சாதகமானது என்பதோடு அந்த ஆடுகளத்திற்கு பழகிக் கொண்டால் அதிக ஓட்டங்கள் குவிக்க முடியும். இன்றைய போட்டி பகல் ஆட்டம் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.