பேராதனை பகுதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன பிரதேசத்திலேயே நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்துக்கு வழிபாடு செய்வதற்காக வந்த 38 பேர் பயணித்த பஸ் வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் நெல்லிகலையிலிருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சரிவான வீதியில் பஸ் சறுக்கிச் சென்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹல்பொல, பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகவும் அத்துடன் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்