யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 4 சந்தேக நபர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரனும் அவரது மனைவியும் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பிய வேளையில் பொன்னாலை பாலத்துக்கு அருகில் வைத்து இவர்கள் இருவரும் இருவேறு வாகனங்களில் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் மனைவியை சித்தங்கேணியில் இறக்கி விட்டு, கணவரான பவிதரன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு, இவரை வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக கைவிட்டுச் சென்றிருந்தனர். படுகாயமடைந்த இக்குடும்பஸ்தரை வட்டுக்கோட்டை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், கிளிநொச்சியின் ஜெயபுரம் பிரதேசத்தில் சந்தேக நபர்கள் பதுங்கியிருந்த போது கைது செய்துள்ளனர்.
இச்சந்தேக நபர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், வட்டுக்கோட்டை மற்றும் அராலியைச் சேர்ந்த 37, 32, 25, 22 வயதுடைய சந்தேக நபர்களையே கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இச்சந்தேக நபர்களை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ். விசேட நிருபர்