நவீன வரலாற்றில் கடந்த மாதம் உலகின் அதிக வெப்பமான பெப்ரவரி மாதமாக பதிவானதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்துள்ளது. இதன்படி மாதாந்த வெப்பநிலை பதிவுகளில் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக வெப்பம் சாதனை உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 2023 ஜூன் மாதம் தொடக்கம் ஒவ்வொரு மாதமும் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உலகின் கடல் மேற்பரப்பின் வெப்பம் சாதனை அளவுக்கு பதிவாகி இருப்பதோடு அன்டார்டிகாவின் கடல் பனி கடுமையாக குறைவடைந்துள்ளது.
எல் நினோ காலநிலை நிகழ்வு வெப்பம் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தபோதும் மனித செயற்பாட்டால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் இதற்கு பிரதான காரணியாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கடந்த பெப்ரவரியில் மனிதன் அதிக அளவு புதைபடிவ எரிபொருளை எரிக்க ஆரம்பித்த தொழில்துறைக்கு முந்திய காலத்தை விடவும் சுமார் 1.77 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.