பிரான்ஸ்; கால்பந்து வீரர் போல் போக்பாவுக்கு கால்பந்து விளையாட 4 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு மன்றம் நடத்திய டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனையில் அவர் உடலில் ஊக்கமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
30 வயது போக்பா இனிமேல் 2027–2028 கால்பந்து பருவத்தில்தான் விளையாட முடியும். அப்போது அவருக்கு வயது 34 ஆகிவிடும்.
கால்பந்து வாழ்க்கை தம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதாக போக்பா கூறினார். தாம் வருத்தமாகவும் மனமுடைந்தும் இருப்பதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார்.
மன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் கொடுத்த துணைச் சத்துப்பொருளை உட்கொண்டதால் டெஸ்டோஸ்டிரோன் வந்ததாக போக்பாவின் பிரதிநிதிகள் கூறினர்.
விளையாட்டுத் திறனை மேம்படுத்தக்கூடிய எந்த மருந்தையும் வேண்டுமென்றே உட்கொள்ளவில்லை என்று போக்பா குறிப்பிட்டார்.
இந்தத் தடை போக்பா ஆடும் சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவான்டஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2018 உலகக் கிண்ண கால்பந்தை வென்ற பிரான்ஸ் அணியில் போக்பா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.