இலங்கை விமானப் படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள கால்பந்தாட்ட லீக்குகளுக்கு இடையில் நடாத்தப்படும் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்னார் லீக் மற்றும் கிளிநொச்சி லீக் அணிகள் தெரிவாகியுள்ளன.
நொக் அவுட் முறையில் இடம்பெற்ற இந்த தொடரின் முதலாவது போட்டியில் வவுனியா லீக் அணியை வீழ்த்திய கிளிநொச்சி லீக் அணி, காலிறுதியில் வடமராட்சி லீக் அணியை வீழ்த்தி, அரையிறுதியில் முல்லைத்தீவு லீக் அணியை தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மறுபுறம் மன்னார் லீக் அணி முதல் போட்டியாக காலிறுதியில் பூனகரி லீக் அணியை வென்று அரையிறுதியில் வலிகாமம் லீக் அணியை வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன்படி இந்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த சுற்றுத் தொடருக்கான கிளிநொச்சி லீக் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரர் ஞானரூபன் வினோத்தும் உதவிப் பயிற்றுவிப்பாளராக மகீபனும் கடமையாற்றுகின்றனர்.
அதேபோன்று, மன்னார் லீக் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சாந்தன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.