காஸா சிறுவர் நிதியத்துக்காக சேர்க்கப்படும் நன்கொடை எதிர்வரும் ஏப்ரல் 11 இல், கையளிக்கப்படவுள்ளதால் நன்கொடை செய்ய விரும்புவோர் விரைவில் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு அறிவித்துள்ளது.
கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இந்த
வேண்டுகோளை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், காஸாவில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை கருத்திற்கொண்டு காஸா சிறுவர்களுக்கான நிதியம் அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகையின் போது காஸா சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை இலக்காக கொண்டே இந்நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிதியத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் எதிர்வரும் ரமழானில் இப்தார் நிகழ்ச்சிகளை நிறுத்தி, நிதியை காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்பு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த நிதியத்திற்கு பங்களிப்பு செய்ய தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டும். ஒரு மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
எனவே, காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் ஏபரல் 11க்கு முன்னர், நன்கொடைகளை வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.