மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் வருடாந்தம் தஞ்சமடையும் வெளிநாட்டுப்பறவைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இக்குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப்பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் சில தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோமீற்றர்கள் தாண்டி பறந்துவரும் இப்பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியிலிருந்து ஏப்ரல் மாதம் வரை இங்கு தங்கியிருப்பதாக சூழலியலாளர்களால் சொல்லப்படுகின்றது.
இப்பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி தங்கியிருக்கும் அதேவேளை இக்குளத்திலுள்ள மீன்களை பிடித்து உணவாக உட்கொள்கின்றது.
மரங்களில் இவை தங்கியிருக்கும் போது வெள்ளை போர்வை போர்த்தியது போல இக்குளத்திலுள்ள மரங்கள் அழகாக காட்சியளிக்கும்.
வருடா வருடம் அழையா விருந்தினர்களாக இப்பகுதிக்கு வருகைதந்து இக்குளத்தில் தங்கியிருந்து செல்லும் இப்பறவைகளும் இக்குளமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்காலப்பகுதிகளில் அதிக மக்கள் வருகை தந்து பறவைகளை பார்வையிட்டு செல்லும் இடமாக இது மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(புதிய காத்தான்குடி தினகரன்,கல்லடி குறூப் நிருபர்கள்)