Monday, May 20, 2024
Home » சர்வதேச கீதை மகோற்சவம் கொழும்பில் இன்று ஆரம்பம்

சர்வதேச கீதை மகோற்சவம் கொழும்பில் இன்று ஆரம்பம்

by Gayan Abeykoon
March 1, 2024 7:10 am 0 comment

ாரதத்தில் உதித்த பெருமைமிகு மாபெரும் இரு இதிகாசங்களில் மஹாபாரதம் ஒன்றாகும். இலக்கியவாதிகளுக்கு அமுதசுரபியான இலக்கியக் களஞ்சியமாகவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு அடிமுடி தெரியாத வரலாற்று ஜோதிப் பொக்கிஷமாகவும், ஆன்மீக சிந்தனையாளர்களுக்கு உத்வேகம்தரும் ஒப்பற்ற சக்தியாகவும் மஹாபாரதம் விளங்குவதுடன், வாழ்வின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்வியல் பாடம் சொல்லித்தரும் அட்சய பாத்திரமாகவும் திகழ்கிறது. 

இவ்வாறு புகழ்பெற்ற மஹாபாரதம் இதிகாசத்தை மக்கள் வாழ்வியலுடன் இணைக்கும் பொருட்டு ‘சர்வதேச கீதை மகோற்சவம் 2024’ நெலும்பொகுன திரையரங்கில் மார்ச் மாதம் முதலாம்(இன்று), இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது. புத்தசாசன சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில், கலாசார அமைச்சு, இந்து கலாசாரத் திணைக்களம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியன இணைந்து சர்வதேச கீதை மகோற்சவத்தை ஏற்பாடு செய்துள்ளன.

சர்வதேச கீதை மகோற்சவம் 2024 மிகவும் பிரமாண்டமான முறையில் இலங்கையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மகாபாரத புராண இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு மகாபாரதம் கூறிய கருத்துக்கள் தற்கால வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சித்தரிக்கும் வகையிலே பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் விழாவை அலங்கரிக்கவுள்ளன.

ரங்கோலி கோலப் போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள், மகாபாரத கதாபாத்திரங்களை சித்தரிக்கும் கலைநிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா என்பன இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறுவதோடு, மாலை 6 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்று, இரவு 8 மணிக்கு மாபெரும் இசைநிகழ்ச்சி இடம்பெறும்.

இரண்டாம் திகதி சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சர்வமத தலைவர்கள் உள்ளடங்கலாக ஆய்வாளர்கள் மற்றும் புலமையாளர்கள் கலந்து கொள்ளும் மகாபாரத கருத்தரங்குகள் மும்மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதியுடன் இடம்பெறும். மாலை 5 மணிக்கு அரச உயர் மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர், ஆலய அறங்காவலர் தலைவர்கள் உள்ளடங்கலான முக்கிய பிரமுகர்களின் பங்களிப்புடன் பிரதான வைபவம் இடம்பெறும். அதனைத்தொடர்ந்து இரவு ஏழு மணிக்கு வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மாணவிகள் வழங்கும் சிறப்பு கலை ஆற்றுகை நிகழ்ச்சி, ஏனைய கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசைநிகழ்ச்சியுடன் இரண்டாம் நாள் நிகழ்வு நிறைவடையும்.

மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் கைவினை கண்காட்சி, புத்தகக் கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று, மாலை 5 மணி தொடக்கம் யாகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சோபன யாத்திரா இடம்பெறும். சோபன யாத்ராவில் மகாபாரத கதைகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஆற்றுகைகளோடு, கலை நிகழ்ச்சிகள் ஏனைய கண்ணைக் கவரும் கலாசார பண்பாட்டு அம்சங்கள் இடம்பெறும். அர்ஜூனனுக்குக் கண்ணன் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு பகவத்கீதையாகும். இந்நூல் இந்துக்களின் ஒப்பற்ற புனிதநூலாகப் போற்றப்படுகிறது. மனித வாழ்விற்குத் தேவையான ஒப்பற்ற வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிகளைப் பகவத்கீதை கூறுகிறது.

உமாச்சந்திரா பிரகாஷ்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT