ஏறாவூர் – ஐயங்கேணி ரயில் தண்டவாளப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுநேர கடுகதி ரயிலில் மோதியே இவர் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் ஐயங்கேணி பாரதிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி சந்திர மோகன் (40) என அவரது மனைவியால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபானம் அருந்தும் பழக்கமுடைய இவர் கடந்த சில வருடகாலமாக குடும்பத்தைவிட்டுப்பிரிந்து வாழ்வதாக தகவல் கிடைத்துள்ளது. திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மற்றும் ஏறாவூர் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். கூலித்தொழிலாளியான இவர் கடன் தொல்லையினால் விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து இவரது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்று கடந்த இரண்டு வருடங்கள் பணிபுரிந்து கடன்களைச் சீர்செய்துள்ளார். இருந்தபோதிலும் இவரது மதுப்பழக்கத்தினால் குடும்ப உறவு துண்டிக்கப்பட்டிருந்ததாக மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
( ஏறாவூர் நிருபர் )