ஒரு சாதாரண மனிதனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் வருமோ அவை அத்தனைக்கும் விளக்கமாக பதிலளித்துள்ளார் பகவான் கிருஷ்ணர். அதனாலேயே அனைத்து நூல்களுக்கும் தலைமை நூலாகவும், வேதங்களுக்கு நிகரானதாகவும் பகவத் கீதை கருதப்படுகிறது.
இந்து மதத்தின் புனித நூலாக போற்றப்படும் பகவத் கீதை, மிகப் பெரிய இதிகாச நூலான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவான் கிருஷ்ணனுக்கும், அர்ஜூனனுக்கும் இடையே நடந்த உரையாடலே கீதையாகும். குருஷேத்திர போர் துவங்குவதற்கு முன் தனது சகோதரர்களான கெளரவர்களை எதிர்த்து எப்படி யுத்தம் செய்வது என யுத்த களத்தில் தடுமாறி நின்ற அர்ஜூனன் கேட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணர் விளக்கம் அளித்தார்.
5000 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சொன்ன உபதேசங்கள் எல்லா காலத்திற்கு ஏற்றதாக அமைந்தது தான் இந்த தனிச்சிறப்பு. ஒருவரின் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாக இந்த உபதேசம் அமைந்துள்ளது. வாழ்க்கை மற்றும் வாழ்க்கையின் உண்மைகள் ஆகியவற்றை இந்த நூல் எடுத்துச் சொல்கிறது.
பகவத்கீதையின் மகிமை பற்றி கிருஷ்ணன்,
“ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூ ஸூகம் கர்தும் அவ்யயம்”
என குறிப்பிடுகிறார்.
தர்மத்தின் பக்குவ நிலைபொருள்: இந்த அறிவு, ஞானத்தின் அரசனும் எல்லா விதமான ரகசியங்களிலும் மிக உயர்ந்த தேவ ரகசியமானதும், மிக தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இது அழிவற்றதும், பேரின்பத்துடன் இணைந்து செயலாற்றுவதாகும்.
பகத்கீதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் விளக்கினாலும் இறுதியில் அதை கேட்பவரை தர்ம வழியில் கொண்டு செல்வதே அதன் நோக்கமாக இருக்கும். இதனால் மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை,
“கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன
மா கர்மபல ஹேதுர்பூர் மாதே ஸங்கோ ஸ்த்வகர்மணி”
இது பகவத் கீதையின் பிரபலமான ஒரு ஸ்லோகம் ஆகும். இதில் கர்மா என்பது ஒருவர் செய்யும் செயலை குறிக்கும். ஒரு செயலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. உனக்காக கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவது மட்டுமே உன்னுடைய வேலை. ஆனால் அந்த செயலால் விளையும் பலனில் உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது. ஒரு செயலை செய்யும் போது அதன் பலன் என்னவாக இருக்கும் என்பதை யோசித்து, அதை நோக்கமாக கொண்டு உனது செயலை செய்யாதே.
அதே போல் உங்களின் செயல்களால் வரும் முடிவுகளுக்கு நீங்களே காரணம் என ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த செயல் என்னை கருவியாக கொண்டு நடத்தப்பட்டது. எனக்காக நடத்தப்பட்டது என எதன் மீதும் பற்றற்ற நிலையிலேயே இருக்க வேண்டும் என கிருஷ்ணர் விளக்கி உள்ளார். பகவத் கீதையானது பரம்பொருளாக இறைவனே, நேரடியாக மனிதனுக்கு கூறியது.