கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற் பயிற்சிகள் மார்ச் மாதம் 05 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தாம் விரும்பும் தொழில்சார் பாடத்தை இதன் மூலம் இலவசமாகக் கற்க முடியும் எனவும், நாடு முழுவதிலும் உள்ள 300 மத்திய நிலையங்களைப் பயன்படுத்தி இப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதா கவும் அமைச்சர் கூறினார். அண்மையில் வாராபிட்டிய பாடசாலை பிரதேசத்தில் ஊட்டப் பாடசாலைகளுக்கான வள விநியோகத் திட்டத்தில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இரு நூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு பாடசாலை பைகள், பாடசாலை உபகரணப் பொதிகள், பாடசாலை காலணி வவுச்சர்கள், அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டன. வாராப்பிட்டிய மகா வித்தியாலயம், ஹந்துகல மகா வித்தியாலயம், மற்றும் கெகிரியோபட மகா வித்தியாலயங்களுக்கு இரண்டு மின்சார துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. இப் பிரதேசத்தில் உள்ள மேலும் ஆறு பாடசாலைகளுக்கு மின்சார துவிச்சக்கரவண்டிகளும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழிநுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் தற்போது ஒவ்வொரு பிரதேசத்திலும் நிறுவப்பட்டுள்ள கணினி வள நிலையங்களின் உதவியுடன் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் பாரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்குப் பின்னர் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.