தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தாம் தெரிவித்த கருத்து சமூகத்தில் பாரிய விமர்சனத்துக்குள்ளானதை அடுத்து மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நொயெல் பிரியந்த நேற்று தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.இவர், இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.மேலும், இவரது கருத்துக்காக மின்சார சபை மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் சார்பில் மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் தமது x வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது (20) கல்வி கற்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் குப்பி விளக்குகளை பயன்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்திருந்த கூற்று சமூகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையிலேயே அவர் தனது கூற்றுக்காக வருத்தம் தெரிவித்துவிட்டு மக்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்தும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறான கருத்தை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த போது, கல்வியில் சிறந்து விளங்கிய தமது மூத்த தலைமுறையினரின் முன்மாதிரியையும் சுட்டிக் காட்டியே அவர், மேற்படி கூற்றை வெளியிட்டிருந்தார்.
இவரது மேற்படி கூற்று தொடர்பில் நேற்று பாராளுமன்றத்திலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்