சமூகத்தின் எதிர்கால வழிகாட்டியாக திகழ்கின்ற சிறுவர்களின் கல்வியில் பெற்றோர் கூடிய கரிசனையுடன் செயற்பட வேண்டும். அப்போதே சமூகம் எதிர்பார்க்கின்ற இலக்கை அடைய முடியுமென, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சித்தி பாத்திமா தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான தரம் 01க்குரிய புதிய மாணவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வு பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (22) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,
“பெற்றோர் தமது பிள்ளைகளை உரிய முறையில் வளர்க்க வேண்டியது அவர்களின் கட்டாயமாகுமென்பதுடன், இலங்கையில் கல்வி மிக முக்கியமாக உள்ளது.
உரிய முறையில் பிள்ளைகள் கல்வியை பெறுவதன் மூலம் பிஞ்சு உள்ளங்கள் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக முடியும்.
வறுமை கல்வியை விடுவதற்கு ஒரு காரணமல்ல. வறுமையில் இருந்தவர்களே இன்று கல்வியில் சிறந்த தலைவர்களாக உள்ளனர். பிள்ளைகள் மீதான இலட்சியம் பெற்றோரிடம் காணப்பட வேண்டும்.
அப்போதே எமது பிள்ளைகளை சிறந்த சமூகத்தின் தலைவர்களாக மாற்ற முடியும்.
பாடசாலையில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிப்பதற்கு ஆசிரியர் சமூகம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அதற்கு பெற்றோராகிய நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒரு கிராமத்தின் வளர்ச்சியும் சமூகத்தின் வளர்ச்சியும் அக்கிராமத்தில் உருவாகின்ற கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளது” என்றார்.
ஒலுவில் விசேட நிருபர்