தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியுமென தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பள அதிகரிப்புக்கு இணங்காத நிலையில், சம்பள நிர்ணய சபையின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இம்மாத இறுதிக்குள் இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சபையில் நம்பிக்கை வெளியிட்டார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;
தொடர்ந்து இழுபறியாகவுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இ தில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது.
பெருந்தோட்ட நிறுவனங்களோடு இது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு விரும்பவில்லை. அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே அந்நிறுவனங்கள் உள்ளன.
இதை,கவனத்திற் கொண்டுள்ள நாம் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் கலந்துரையாடி சம்பள நிர்ணய சபையைக் கூட்டி, இதன் மூலம் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளோம். அந்த வகையில் இந்த மாத இறுதிக்குள் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்