ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.பிரதேச ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட இந்தச் செயலமர்வு “EMPOWER” எனும் தொனிப்பொருளின் கீழ்,இரு தினங்கள் நடத்தப்பட்டன . வெறுப்பூட்டும் பேச்சு, தவறான நோக்கில் பரப்பப்படும் உண்மையான தகவல்கள் மற்றும் குரோத தகவல் அறிக்கை, தனிப்பட்ட தகவல் அறிக்கைகள், துஷ்ட நோக்கில் பரப்பப்படும் உண்மையான தகவல்கள், குரோத அறிக்கைகள், குற்ற அறிக்கையிடல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. (UNDP) வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தப் பயிற்சிப்பட்டறை, 2023 ஆகஸ்ட் 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி பட்டறையுடன் தொடங்கியது.
நாட்டில் உருவாகும் தொழில் வல்லுநர்கள் பலருக்கு நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து உண்மையான அறிவு இல்லாதுள்ளது. இவ்வாறுள்ள
சமூகத்துக்கு மத்தியில்,ஊடகவியலாளர்களுக்கு பாரிய பொறுப்புள்ளது. தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பில், உண்மைத் தகவல்களைப் பெற்று நியாயமாகவும், விமர்சன ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும், விவேகமாகவும் சமூகத்திற்கு முன்வைப்பது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும்.குரோதமற்ற, வன்முறை அல்லாத மனிதாபிமானத்தை மதிக்கும் சமூகத்திற்காக இது முக்கியமானதென நான் நம்புகிறேன். இதற்காக நிதி உதவியை வழங்கிய ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தினருக்கும், பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டுக்குத் தேவையான எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய எங்களிடம் வெளிநாட்டு கையிருப்பு இருக்கவில்லை. இறுதிக்கட்டத்தில் இருந்த கட்டுமானப் பணிகள் கூட பாதியில் நிறுத்தப்பட்டன. எரிவாயு பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிலர் அங்கு உயிரையும் இழந்தனர். கலவரம் மூண்டது. நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலைமைகள் குறித்து ஊடகங்கள் வெவ்வேறு வழிகளில் செய்திகளை வெளியிட்டன. நாடு பொருளாதார ரீதியாக எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடிக்கு பொருளாதார தீர்வே உள்ளது.
அரசியல் தீர்வு இல்லை. இந்தச் சூழலைப் பற்றிய சரியான புரிதலை வழங்குவதில் ஊடகங்கள் நியாயமான, உண்மையான மற்றும் முக்கியமான பங்காற்றியதாக நான் நம்பவில்லை.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச அமைப்புக்கள் செய்துள்ள உடன்படிக்கைகளின்படி 2027ஆம் ஆண்டளவில் ஏற்படக்கூடிய வெளிநாட்டு வள இடைவெளி 3911 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதைத் தீர்ப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ்,உதவிகளைப் பெறத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.——