ஒப்பந்தம் கைச்சாத்தானதாக அமைச்சர் தெரிவிப்பு
இஸ்ரேல், இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவைக்கான ஒப்பந்தம் நேற்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது , இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார். இதில் கருத்துரைத்த அமைச்சர்:
கொள்கலன் கப்பல் போக்குவரத்து சுமார் 32 வீத வளர்ச்சி கண்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் நேற்று காலை கைச்சாத்திடப்பட்டது. இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை, விமான சேவைகள் அமைச்சுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய எதிர்பார்த்துள்ளனர்.இவர்களுக்கு இந்த விமான சேவை பயனுள்ளதாக அமையும்.
பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ (Indigo Airlines) விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. இதன்பிரகாரம் ஒரு முதலீட்டாளரை டெண்டர் சபை தெரிவு செய்துள்ளது.
குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம். இதன் மூலம் அந்த விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும். இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.