பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் நினைவு முத்திரையொன்று வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் அதிபர் மஸ்னவியா ரிப்கான் தலைமையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ெடாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ, எம்.எஸ்.எம். அஸ்லம், பேருவளை முன்னாள் நகரபிதா மஸாஹிம் முகம்மத், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இப்திகார் ஜெமீல், எம்.எம். அம்ஜத், மேல்மாகாண தமிழ்மொழி பிரிவு கல்விப் பணிப்பாளர் முஹம்மத் நஜீப், பேருவளை பிரதேச செயலாளர் ரன்ஜன் பீ பெரேரா, களுத்துறை கல்விப் பணிப்பாளர் அஜித் விக்ரம ஆராச்சி ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்குபற்றுவர்.
களுத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ். ஜயகுமார், பேருவளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் டபிள்யு.ஏ.ஜே.யு சோமரத்ன, களுத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். இல்யாஸ், தபால் திணைக்கள களுத்துறை பிரதேச அதிகாரி பீ.டி.கே.ரேமரத்ன ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொள்வர்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரியான இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.பாஹிம் தெரிவித்தார்.
ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டுடன் பெண் ஆளுமைகளை கௌரவித்தல், நடைபவனி, விளையாட்டுப் போட்டி, பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டி, களியாட்ட நிகழ்வு மற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெறும் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள், உலமாக்கள், பிரமுகர்கள், பாடசாலையின் வளர்ச்சிக்குப் பங்களித்த நன்கொடையாளர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.
நூற்றாண்டு விழாவினை மிக விமரிசையாக கொண்டாடுவதற்கான பரவலான ஏற்பாடுகளை பாடசாலை சமூகம் மேற்கொண்டு வருகிறது.
பேருவளை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவவும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.