மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிதாக ஆசிரிய உதவியாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக இழுபறி நிலையிலிருந்த இந்நியமனங்கள் தற்போது சுமுகமடைந்துள்ளது. இதனால் மிக விரைவில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதையடுத்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் 2,531 ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான தடைகள் தற்போது நீங்கியுள்ளன. நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்கள த்தின் பணிப்பாளருடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு அனுமதியை வழங்க நிதி அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளது.இந்த வகையில் தகுதியுள்ள மத்திய மாகாணத்தில் நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாதவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படும். இம்மாதத்துக்குள் இந்த நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)