விடுதலை புலிகளிடமிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக நாம் தமிழர் கட்சியினுடைய நிர்வாகிகளின் வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களிலேயே இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினுடைய நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தியதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளிலும், ஆலந்துறையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித்தின் வீட்டிலும், காளப்பட்டியிலுள்ள முருகனின் வீட்டிலும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் ஆய்வாளர் செந்தில் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
4 மணிநேரம் இவர்கள் இருவரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இவர்களது வங்கிக் கணக்குகள் மற்றும் இணையத்தளங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன், இவர்கள் இருவரது கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடித்துக்கொண்டு சென்றதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, திருச்சியிலுள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், இவருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு பதியப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான வழக்கு தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கம் செய்ய நிதி சேகரிப்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தியதாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சில ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்தியை நேற்றுக் காலை சென்னையிலுள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் முன்னிலையாகக் கூறி வட்ஸ்அப் மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்ததாகவும், ஆயினும் இவர் வெளியூரில் இருப்பதால் 5ஆம் திகதி முன்னிலையாகுவதாக தகவல் வழங்கியுள்ளதாகவும், இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.