பேர்த் துறைமுகம் ஒன்றுக்குத் திரும்பியுள்ள கப்பல் ஒன்றில் உள்ள 16,000 செம்மறியாடுகள் மற்றும் மாடுகள் கடும் வெப்பத்திற்கு மத்தியில் அவுஸ்திரேலிய கடற்கரைக்கு அப்பால் நிர்க்கதியாகியுள்ளன.
செங்கடல் வழியாக இஸ்ரேலை நோக்கி கடந்த மாதம் பயணத்தை ஆரம்பித்த எம்.வி. பஹிஜா என்ற இந்தக் கப்பல் யெமன் ஹூத்திக் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகும் அச்சம் காரணமாக அந்தப் பயணத்தை கைவிட்டது. இதனால் கப்பலில் உள்ள கால்நடைகள் பல வாரங்களால் கடலில் தவித்து வருகின்றன.
இந்த கால்நடைகளை கப்பலில் இருந்து இறக்குவது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் முடிவுக்காக கப்பல் காத்து நிற்கிறது.
கப்பலில் உள்ள கால்நடைகள் நலத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கால்நடைகள் சிரமப்படுவது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மீண்டும் இஸ்ரேலுக்கு அனுப்புவதாக இருந்தால் அந்தக் கப்பல் ஆபிரிக்காவைச் சுற்றி ஒரு மாதம் கடந்த பின்னரே சென்றுசேர முடியும் என்று ரோய்ட்டர்ஸ் கூறுகிறது.