ஊடு பயிர்ச் செய்கை மூலம் நிலக்கடலை விதை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது.
திக்கோடை விவசாய போதனாசிரியர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், உதவி விவசாய பணிப்பாளர்களான எஸ்.சித்திரவேல், நித்தியா நவரூபன், தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஊடு பயிர்ச் செய்கைக்கான விதைகள் வழங்குவது, தற்போதைய விவசாய திட்டம் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாழைச் செய்கையில் ஊடு பயிராக செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடையும் நடைபெற்றது.
இதன்போது விவசாயிகளின் குறைநிறைகள், தேவைகள் தொடர்பாக கேட்டறியப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வு விரைவாக பெற்றுக்கொடுக்கப்படுமெனவும், பிரதி விவசாய பணிப்பாளர் தெரிவித்தார்.
பாண்டிருப்பு தினகரன் நிருபர்