புதிய மின் இணைப்புகளை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்களுக்கு தவணை முறையில் கட்டணத்தை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரே தடவையில் பணத்தை செலுத்த முடியாதுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் அதனை செலுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எரி சக்தி, மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேவேளை மின்சார சபையினால் மக்களுக்கு வழங்கப்படும் ஏனைய சேவைகளிலும், இதுபோன்று தவணை முறை பணம் செலுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தவணை முறை பணம் செலுத்தல் வசதிகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்ப டுவதுடன், இது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டத்தாபன அதிகாரிகள், மின்சார சபை அதிகாரிகள், உள்ளிட்ட அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட விசேட பேச்சு வார்த்தையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் மின்சார உற்பத்தி திட்டம், மின் கட்டண அறவீடு, சேவைகளுக்கான செலவு, மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்கான செலவு உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள், இந்த பேச்சு வார்த்தையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்