ஜோர்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி மூன்று அமெரிக்க படையினரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஈராக் போராட்டக் குழுவொன்று அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை இடைநிறுத்தியதாக அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஈரானுடன் தொடர்புபட்ட கதைப் ஹிஸ்புல்லா, “ஈராக் அரசின் சங்கடத்தை தடுப்பதற்கு” இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலளிக்க தீர்மானித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியபோதும், அது தொடர்பில் எந்த விபரத்தையும் வெளியிடவில்லை. எனினும் தமது நலன் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கு எதிராகவும் பதிலடி தரப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
முன்னதாக ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை ஈரான் மறுத்திருந்தது.
இந்நிலையில் கதைப் ஹிஸ்புல்லா குழுவின் செயலாளர் நாயகம் அபூ ஹூஸைன் அல் அமிதாவி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, “ஈரான் அரசின் சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான இராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இடைநிறுவத்துவதாக நாம் அறிவிக்கிறோம். காசாவில் உள்ள மக்களை வேறு வழிகளில் நாம் தொடர்ந்து பாதுகாப்போம்.”
ஜோர்தான் மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஈரானில் தாயாரிக்கப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் தாக்குதல்களை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.