மாத்தளை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மாசிமக மகோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (02) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. அன்றையதினம் முற்பகல் 11.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று, எதிர்வரும் 24ஆம் திகதி காலை இரதோற்சவமும் 26ஆம் திகதி காலை தீர்த்தோற்சவமும் அன்றையதினம் இரவு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளதாக, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை முற்பகல் 11.00 மணிக்கும் இரவு 7.00 மணிக்கும் சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வரவுள்ளதாகவும், கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
23ஆம் திகதி காலை 7.00 மணிக்கு சுடுகங்கை ஸ்ரீஏழுமுகக்காளியம்மன் கோயிலில் காவடி எடுத்தலும் முற்பகல் 10.00 மணிக்கு தீ மிதிப்பும் முற்பகல் 11.00 மணிக்கு ஸ்ரீசிவனடியார் திருவிழாவும் வசந்த மண்டப பூஜையும் பிற்பகல் 1.00 மணிக்கு மகேஸ்வர பூஜையும் அன்றையதினம் இரவு திருவேட்டைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. அத்துடன், அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
24ஆம் திகதி காலை 8.00 மணிக்கு இரதோற்சவ வசந்த மண்டப பூஜையும் 25ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு கற்பூரத் திருவிழாவும் 26ஆம் திகதி காலை 8.00 மணிக்கு பாற்குட பவனியும் நடைபெறவுள்ளது. 27ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு ஸ்ரீசண்டேஸ்வரி உற்சவமும் மாலை 6.00 மணிக்கு பூங்காவனமும் மார்ச் 01ஆம் திகதி இரவு ஸ்ரீவைரவர் பூஜையும் நடைபெறவுள்ளதாகவும், கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்