சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள், இதனை விளையாட்டாக சொல்லவில்லையென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளை இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டினார். இந்தியா குறித்து சாதகமான உணர்வுகளை இலங்கையர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கான எனது ஆலோசனை என்னவென்றால், அடுத்தமுறை நீங்கள் வெளிநாடொன்றுக்கு சுற்றுலா செல்லவிரும்பினால் தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள்.
இலங்கையின் சாதாரண பொதுமக்கள் இந்தியாவை மிகவும் உயர்வாக கருதுகின்றனர். பாராட்டுகின்றனர், இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளை ஏனைய உலகநாடுகள் கைவிட்டன. இச்சந்தர்ப்பத்தில்,இலங்கைக்கு கரம் கொடுத்த நாடு இந்தியா.
நான், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன். எரிபொருள் வரிசைகளை நேரடியாக பார்த்தேன். உணவு அத்தியவசியப்பொருட்களுக்கான பற்றாக்குறைகளை அவதானித்தேன். அவ்வேளையில், இலங்கைக்கு உதவ முன்வந்த ஒரேயொரு நாடு இந்தியா.
இந்தியா இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியது. அவர்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்திடமிருந்தே முதலில் உதவிகள் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி 03 பில்லியன் டொலர்களுக்கு குறைவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் வழங்கியதை விட ஐம்பதுவீதம் அதிகமாக உடனடியாக இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.